[Untitled]‎ > ‎

06.08.15- மனிதமும் நேயமும் ..

posted Aug 5, 2015, 6:52 PM by Unknown user
 
   "" உதவிடலாம் ! ""
   ( குமார். கே.சீ.கே. ஜெர்மனி.04.8 )

     பார்வையை இழந்தவர்கள்
     பலபேர்கள் இருக்கின்றார்
     பார்வையுடன் இருப்பவர்நாம்
     பலவழியில் உதவிடலாம் !

     கல்விதனைக் காணாமல்
     கணக்கற்றோர் நாட்டிலுள்ளார்
     கற்றுநிற்கும் நாமவர்க்கு
     கற்பதற்கு உதவிடலாம் !

     அன்னைதந்தை தெரியாது
     அலமந்து நிற்பார்க்கு
     ஆதரவுக் கரங்கொடுத்து
     அரவணைத்து உதவிடலாம் !

     ஓலைக் குடிசைதனில்
     ஒழுக்குவீட்டில் வாழ்பவர்க்கு
     ஒழுங்கான வாழ்வுவர
     உள்ளத்தால் உதவிடலாம் !

    நீர்கூடக் கிடைக்காமல்
    நிம்மதியைத் தொலைத்துநிற்கும்
    ஊரெல்லாம் தனையெண்ணி
    உணர்வோடு உதவிடலாம் !

   மருத்துவ வசதியின்றி
   மனம்நொந்து நிற்பார்க்கு
   மருத்துவத்தைத் தெரிந்தவர்கள்
   மனதார உதவிடலாம் !

  ஏமாற்றிப் பிழைப்பவரின்
  இடருக்குள் புகுந்தவர்கள்
  இன்னலின்றி வெளியில்வர
  இயன்றவரை உதவிடலாம் !

  மூடத்தனம் என்னும்
  மூட்டைக்குள் இருப்பவர்கள்
  முன்னேறி வருவதற்கு
  முயற்சியுடன் உதவிடலாம் !

  அன்புதனைக் காணாமல்
  அநேகரிங்கு இருக்கின்றார்
  அவரிடத்து நாம்சென்று
  அன்புகாட்டி உதவிடலாம் !
Comments