ஈரேழு உலகங்களையும், சகல உயிர்களையும் காக்கும் கடவுள் என்ற சிறப்பு பெற்றவர் மகா விஷ்ணு. உலக உயிர்களை காப்பாதற்காக, தர்மத்தை நிலைநாட்டுவதற்காக விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்கள் பற்பல. ‘விஷ்ணு’ என்றால் ‘எங்கும் வியாபித்திருப்பவன்’ என்று பொருள்படும். வெண்மை நிறம் கொண்ட பாற்கடலில் வீற்றிருப்பதால் அவர் நாராயணன் என்றும் அழைக்கப்படுகிறார். ‘நாரம்’ என்றால் ‘வெண்ணிற நீர்’ என்று பொருள். ‘அயனம்’ என்றால் ‘இடம்’ என்று பொருள்படும். மகாவிஷ்ணு வைணவ சமுதாயத்தின் நாயகனாக விளங்குகிறார். அவரை வழிபட்டால் வைகுண்டத்தை அடையலாம். பக்தி மார்க்கத்தை விரதமாகக் கொண்டது வைணவம். இதில் விக்கிரக ஆராதனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பரிசுத்தமான பக்தியுடன், மகாவிஷ்ணுவிடம் சரணாகதி அடைந்து விட்டால், பக்தனின் அகங்காரம் அழிந்து, ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றிவிடுவது சாத்தியம் என்கிறது வைணவம். வைணவ வழிபாட்டில் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற அஷ்டகாட்சர மந்திரம் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. |
கலாச்சாரம் >