![]() |
காரைதீவு செய்திகள்
07.09.22- காரைதீவு விபுலானந்தா பூப்பந்தாட்ட போட்டியில் அகில *இலங்கை மட்டத்திற்கு தெரிவு..
06.09.22- இந்துமத எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற காரைதீவு- மண்டூர் திருத்தல பாதயாத்திரை..
இந்துமத எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற காரைதீவு- மண்டூர் திருத்தல பாதயாத்திரை. ஐயாயிரம் அடியார்கள் உணர்வுடன் பங்கேற்பு. காரைதீவில் இருந்து மண்டூர் முருகன் ஆலயத்திற்கான திருத்தல பாதயாத்திரை இந்துமத எழுச்சியுடன் (03.09.2022) சிறப்பாக நடைபெற்றது. முன்னொரு போதுமில்லாத வகையில் சுமார் ஐயாயிரம் அடியார்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர்.காரைதீவு அடியார்களுடன் அட்டப்பள்ளம், திராய்க்கேணி, வீரமுனை ஆகிய கிராம மக்களும் கலந்து கொண்டனர். முருகப்பெருமான் திருவுருவப் படங்கள் தாங்கிய அலங்கரிக்க பட்ட ஏழு உழவு இயந்திரங்கள் முன்னதாக செல்ல, அடியார்கள் "அரோகரா" கோசம் விண்ணைப்பிளக்க, நந்திக் கொடி தாங்கி ,.பஜனைப் பாடல்கள் சகிதம் பாதயாத்திரை நகர்ந்தது. சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் அடியார்கள் வரிசையில் சென்றமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நேற்று (3) சனிக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் மாவடி ஸ்ரீ கந்த சுவாமி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரை ஐந்து மணியளவில் கண்ணகை அம்மன் ஆலயத்தை அடைந்தது. அங்கிருந்துகல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயம் ,ஸ்ரீ முருகன் ஆலயத்தை அடைந்து நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ,கிட்டங்கி, சவளக்கடை ,நாவிதன்வெளி, வேப்பயடி ,தம்பலவத்தை சென்று மண்டூர் ஆலயத்தை சென்றடைந்தது. இடையிலேயே ஆலயங்கள் அன்பர்கள் நீராகாரம் வழங்கி னார்கள். ஆலயத்தை சென்றடைந்ததும் அங்கு காரைதீவு அடியார்கள் பஜனை பாடி பூஜையில் கலந்து கொண்டனர்.கடந்த இரண்டு வருடங்களுக்கு பிற்பாடு இடம்பெற்ற பாதயாத்திரை என்பதால் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. (காரைதீவு நிருபர்) |
05.09.22- மருத்துவத்துறை விஞ்ஞானியாக வரவேண்டும் என்பதே எனது இலட்சியம் மாணவன் துவாரகேஷ்..
மருத்துவத்துறை விஞ்ஞானியாக வரவேண்டும் என்பதே எனது இலட்சியம்.அகில இலங்கை ரீதியில் உயிரியல் துறையில் முதலிடம் பெற்ற மாணவன் துவாரகேஷ் கூறுகிறார். சர்வதேச பல்கலைக்கழகத்தில் பயின்று பல ஆராய்ச்சிகள் செய்து மருத்துவத்துறை விஞ்ஞானியாக வரவேண்டும் என்பது எனது இலட்சியம். என்று அகில இலங்கை ரீதியில் உயிரியல் துறையில் முதலாம் இடம் பெற்ற மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் தெரிவித்தார். இவ்வாரம் வெளியான 2021 உயர்தர பரீட்சை முடிவுகளின் படி அகில இலங்கை ரீதியில் உயிரியல் துறையில் முதலிடம் பெற்று சாதனை படைத்த காரைதீவிவைச் சேர்ந்த மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் அவர்களின் செவ்வி இது. கிழக்கு மாகாண வரலாற்றில் அகில இலங்கை ரீதியில் கிழக்கு மாணவன் ஒருவன் முதலிடம் பெற்றது இதுவே முதல் தடவை . அதுவும், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணில் தோன்றிய துவாரகேஷ் மட்டக்களப்பு புனிதமிக்கேல் கல்லூரியில் பயின்று இந்த சாதனையை பதிவு செய்திருக்கிறார் . அவரது தந்தையார் தோல் வைத்திய நிபுணர் தமிழ்வண்ணன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றுகிறார். அவரது தாயார் பகீரதி வைத்திய அதிகாரி அவரும் அங்கு பணியாற்றுகின்றார். இவருக்கு இரண்டு சகோதரிகள் .ஒருவர் உயர்தரம் பயில்கின்றார்.மற்றயவர் தரம் பத்தில் பயில்கிறார். இருவரும் மட்டக்களப்பு சிசிலியா மகளிர் கல்லூரியில் பயில்கின்றனர். காரைதீவில் பிறந்து மண்டூரில் கரம்பிடித்த பண்டிதர் நல்லரத்தினம் அவர்களின் பேரன் துவாரகேஷ் ஆவார் . அவர்கள் தற்போது மட்டக்களப்பிலே வாழ்ந்து வருகின்றார்கள். கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் அவர்களை பேட்டி கண்ட பொழுது அவர் கூறுகையில்.. கேள்வி. அகில இலங்கை ரீதியில் நீங்கள் முதலிடம் வருவீர்கள் என்று எதிர்பார்த்திருந்தீர்களா? பதில். தேசிய மட்டத்தில் வருவேன் என்று தெரியும். இருந்தாலும் அகில இலங்கை ரீதியில் முதலிடம் என்பது நான் எதிர்பார்க்கவில்லை. முதன் முதலில் பரீட்சை முடிவை பார்த்தவுடன் மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. எடுத்தவுடன் அம்மாவிடம் கூறினேன். கேள்வி. தங்களின் ஆரம்பக்கல்வி பற்றி கூறுங்கள்.. பதில். நான் ஆரம்ப கல்வியை கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் இரண்டு வருடங்கள் படித்துதுவிட்டு புனித மைக்கேல் கல்லூரிக்கு வந்து விட்டேன். தந்தையும் தாயும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் என்பதால் மட்டக்களப்புக்கு வர வேண்டிய சூழல். கேள்வி. நீங்கள் பெரும் சாதனை படைத்திருக்கின்றீர்கள். புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகள் பெற்று மாவட்டத்திலே அன்று சாதனை படைத்தீர்கள்.இன்று மருத்துவத்துறையில் முதல் மாணவராக தேர்வாகிஉள்ளீர்கள். இந்த சந்தோஷமான நேரத்தில் யாருக்காவது நன்றி செலுத்த விரும்புகிறீர்களா? பதில். ஆம் முதலிலேயே என்னைப் படைத்த இறைவனுக்கும் அடுத்து அன்பையும் ஆதரவையும் தந்த பெற்றோர்களுக்கும் சகோதரர்களுக்கும் அடுத்து பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். கேள்வி. கொரோனா கால கட்டத்தில் சிரமத்தின் மத்தியில் இந்த படிப்பினை மேற்கொண்டு இருக்கின்றீர்கள். அது எப்படி இருந்தது? பதில். கொரோனாக்காலத்தில் முதலாம் வருடத்தில் ஒரு தவணையும் இரண்டாம் பருவத்திலே ஒரு தவணையும் தான் பாடசாலைக்கு செல்ல முடிந்தது .ஏனைய நேரங்களில் நிகழ்நிலை வகுப்புகளிலும் கலந்து கொள்ள கூடியதாக இருந்தது.அப்போது நான் பாடசாலைக்கு 95 வீத வரவை பதிவு செய்தேன். சந்தோஷமாக இருந்தது . கேள்வி . உங்களுக்கு அடுத்ததாக வருகின்ற மாணவர் சமுதாயத்திற்கு சொல்லக்கூடிய ஆலோசனை ஏதாவது இருக்கின்றதா ? பதில். ஆம் கஷ்டப்பட்டு படிக்க வேண்டாம். கண்மூடித்தனமாக விடிய விடிய படிக்க வேண்டும் என்று படிக்க வேண்டாம் .ஆழமாக திட்டமிட்டு ஸ்மார்ட் முறையில் படிக்க வேண்டும். கஷ்டப்பட்டு படிக்க படிக்க வேண்டும் என்பதற்காக உடலை வருத்த வேண்டும் என்பது இல்லை .உரிய முறையில் தேவையான பயிற்சி செய்து கேள்விகளை அதிகம் செய்து இந்த படிப்பை மேற்கொள்ள வேண்டும் . கேள்வி ..டியூசனை மட்டும் நம்பி உங்களது படிப்பு இருந்ததா ? பதில். அப்படி இல்லை ரியூசனை மட்டும் நம்ப முடியாது. நாங்கள் பாடசாலையிலும் நிகழ்நிலை வகுப்புகளிலும் கூடுதலான நேரத்தை செலவிட்டைன். எனது படிப்பு இரவு 10:30 மணி வரைக்கும் இருக்கும். காலையிலே நான்கு முப்பது முதல் ஐந்து மணி வரை நிச்சயமாக எழுந்து கொள்வேன். கேள்வி. படிப்பு நேரத்தில் கைபேசி மற்றும் தொலைக்காட்சி பாவனை எவ்வாறு இருந்தது? பதில்.கைபேசி எமது படிப்புக்கு அத்தியாவசியமாக இருந்தது .அதற்கு மாத்திரம் அதனை பயன்படுத்தினேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பெரிதாக பார்ப்பதில்லை . கேள்வி. நீங்கள் பொது விவேக பரீட்சையிலே 90 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டுள்ளீர்கள். பதில். ஆம் பொது விடயங்களில் எனக்கு பொதுவாக நாட்டம் இருந்தது. கல்வி ஒன்றுதான் எம்மை கௌரவத்தோடு வாழவைக்கும். சாதனை மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ் அவர்களை அவர் கற்ற பாடசாலை முதல் பல தரப்பினரும் வீடு தேடிச் சென்று வாழ்த்தி பாராட்டி வருகின்றனர். அம்பாறை மாவட்டத்திலிருந்து முதல் முதலாக அரசியல் பிரமுகர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று முன்தினம் மட்டக்களப்புக்கு சென்று அவரது வீட்டில் பாராட்டி கௌரவித்தது. கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களான சந்திரசேகரன் ராஜன் வடிவுக்கரசு சந்திரன் கதிரமலை செல்வராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் அங்கு சென்று அவரைப்பாராட்டி கௌரவித்தனர். அவர்களுடன் காரைதீவை சேர்ந்த கல்வியியலாளர் வி.ரி.சகாதேவராஜாவும் சமுமளித்திருந்தார். உறுப்பினர் ராஜன் அங்கு பாராட்டி பேசுகையில்... இது ஒரு இமாலய சாதனை .வரலாற்று பதிவு .அம்பாறை மாவட்டத்திற்கு குறிப்பாக கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்த முன்னொரு போது மில்லாத மாபெரும் கல்வி சாதனை இது. துவாரகேசை பாராட்டுவதில் நாங்கள் அனைவரும் மிக மிக மகிழ்ச்சி அடைகின்றோம்.. என்றார். கல்வியியலாளர் வி.ரி.சகாதேவராஜா கூறுகையில்.. உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த மண்ணில் தோன்றிய தமிழ்வண்ணன் துவாரகேஷ் உலகத்தை மீண்டும் காரைதீவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்றார். அவரது உன்னதமான சாதனையால் முழு தமிழ் பேசும் சமுகமும் பெருமையடைகிறது. காரைதீவைச் சேர்ந்த நல்லரெத்தினம் பண்டிதரின் மகன் தோல் வைத்திய நிபுணர் டாக்டர் தமிழ்வண்ணன் , துவாரகேஷ்ஷின் தந்தை. காரைதீவிவை சேர்ந்த பொறியியலாளர் திருச்செந்தில்வேலின் மகள் வைத்திய அதிகாரி டாக்டர் பகீரதி, துவாரகேஷின் தாய். இவரது அதிஉயர் சாதனையால் கிழக்கில் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மீண்டும் கல்வியியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். என்றார். செவ்வி . வி.ரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர் |
01.09.22- மொழி உரிமை பற்றிய மாவட்ட செயலமர்வு..
மனித அபிவிருத்தி தாபனம் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டு செயற்திட்டத்தின் ஆதரவுடன், அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்திய மொழிஉரிமைகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்புத்திட்டம் சம்பந்தமான மாவட்ட செயலமர்வு, மற்றும் திட்ட வளர்ச்சி பற்றிய பின்நோக்கு நிகழ்வு நேற்று காரைதீவு லேடிலங்கா மண்டபத்தில் நடைபெற்றது. தாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பிபி .சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.கௌரவ அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் இலங்கை மனிதர் உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏசிஏ.அசீஸ் சம்மாந்துறை வலய உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா அரசசார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர் ஐ.எல்.எம்.இர்பான் அம்பாறை மாவட்ட தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் பிரதீஸ்கரன் பிரான்சிஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். இதன்போது ,திட்ட வளர்ச்சி பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டதோடு இத்திட்டத்திற்கு உதவியோருக்கு பதக்கம் நினைவு பரிசு வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் தாபனத்தின் வடகிழக்கு மாகாண பணிப்பாளர் பொன்னையா சிறிகாந்த் அம்பாறை உதவி இணைப்பாளர் எம்.ஜ. ரியால் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். ( காரைதீவு சகா) |
30.08.22- உலக பூப்பந்தாட்ட அமைப்பின் இறுதி போட்டி..
WTBF அமைப்பின் ஏற்பாட்டில் Holland நாட்டின் அனுசரணை மற்றும் இலங்கை பூப்பந்தாட்டக் கிளையுடனும் இணைந்து நடாத்துகின்ற அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு( 27.08.2022) நிந்தவூர் MAC Sports Park பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் நடைபெற்றது. இதன்போது வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கான வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டன. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரைமாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஐ.எம். அமிர் அலி கலந்து சிறப்பித்தார். அத்துடன் பல சிறப்பதிதிகளும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். ( காரைதீவு சகா) |
30.08.22- விபுலானந்தாவில் நான்கு மருத்துவம், ஒரு பொறியியல்..
காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலையில் நேற்று வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி 4 மாணவிகள் மருத்துவ துறைக்கும், ஒரு மாணவி பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் ம.சுந்தரராஜன் தெரிவித்தார். மாணவிகளான லோகநாதன் புவித்ரா, சகாதேவராஜா டிவானுஜா, தங்கவடிவேல் டயானு ஆகியோர் 3 ஏ சித்திகளையும், ராஜேஸ்வரன் கம்ஷாயினி இரண்டு ஏ ஒரு பி சித்திகளையும் பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகி உள்ளார்கள். ரஜிநாதன் துர்க்கா மூன்று ஏ சித்திகள் பெற்று பொறியியல் துறைக்கு தெரிவாகியுள்ளார். ( காரைதீவு சகா) |
27.08.22- காரைதீவில் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி..
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் தனது 35 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டுசபாபதி-சோதியம்மா ஞாபகார்த்த நிதியத்தின் அனுசரணையில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சுற்றுப் போட்டியில் காரைதீவு,சம்மாந்துறை ,சொறிக்கல்முனை,ஆலையடிவேம்பு, வளத்தாப்பிட்டி ஊர்களைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றுகின்றன. இறுதிப் போட்டியானது எதிர் வரும் 28.08.2022 அன்று பி.ப 4.00 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது என கழக செயலாளர் கே.உமாரமணன்( தொழில்நுட்ப உத்தியோகத்தர்) தெரிவித்தார். ( காரைதீவு சகா) |
21.08.22- கிருஷ்ண ஜெயந்தி விரதத்தினை முன்னிட்டு பால்குட பவனி ..
காரைதீவு மகாவிஷ்ணு ஆலயத்தினரால் கிருஷ்ண ஜெயந்தி விரதத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பால்குட பவனியானது (21.08.2022) காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்து காலை வேளையில் ஆரம்பித்து காரைதீவு கொம்புச்சந்தியை அடைந்து பாலர் பாடசாலை மாணவர்களின் பங்கு பற்றலுடன் அங்கு உறியடி நிகழ்வானது சிறப்பாக நடைபெற்று பால்குட பவனி மகாவிஷ்னு ஆலயத்தை சென்றடைந்தது.இன் நிகழ்வில் பெரும் திரளான அடியவர்கள் கலந்து கொண்டனர். |
17.08.22- கதிர்காம பாதயாத்திரை வர்த்தமானி பிரகடனம் செய்யப்படவேண்டும்..
கதிர்காம பாதயாத்திரை வர்த்தமானி பிரகடனம் செய்யப்படவேண்டும் காரைதீவு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்.. மூவின மக்களும் சங்கமிக்கின்ற ஐக்கிய புனித பூமியான கதிர்காமம் ஆடிவேல் விழாவை முன்னிட்டு நடைபெறும் புனித பாதயாத்திரை இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தமானி பிரகடனம் செய்யப்படவேண்டும். இவ்வாறு கோரும் தீர்மானம் காரைதீவு பிரதேச சபையில் அனைத்து தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் இணைந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. காரைதீவு பிரதேச சபையின் 54 ஆவது மாதாந்த அமர்வு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது. அச்சமயம் மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் முன்மொழிந்தார். மாளிகைக்காடு சுயேட்சை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர் வழிமொழிந்தார். ஏனைய அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இப் பிரேரண இலங்கையின் ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு தீர்மானப் பிரதிகள் அனுப்பிவைக்கப்படவுள்ளன. பிரேரணையை முன்வைத்து பேசுகையில் மேலும் உரையாற்றுகையில்.. வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் விழாவை ஒட்டிய பாதயாத்திரை இம்முறை பலத்த சோதனைகளுக்கு உள்ளாகி இருந்தது. அது மட்டுமல்ல இந்த பாதயாத்திரை அதன் புனிதத்துவத்தை இழந்துவிட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு பல அசாதாரண சம்பவங்களும், அனர்த்தங்களும் இடம்பெற்றிருக்கின்றன . இப் பாதயாத்திரை முறையாக சீரமைக்கப்பட வேண்டும். புனிதத்துவமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதன் கலாச்சாரம் பாரம்பரியம் பண்பாடுகள் பேணப்பட வேண்டும் என்று அடியார்கள் பலர் ஆணித்தரமாக கருத்துக்களை என்னிடம் தெரிவித்துள்ளார்கள். இம்முறை, வரலாற்றில் என்றும் இல்லாத அளவிலே யால சரணாலய பகுதியில் உள்ள வியாழ ஆற்றிலே திடீரென ஐந்து அடிக்கு காட்டாற்று வெள்ளம் வந்து பெரும் அனர்த்தத்தை அடியார்களுக்கு ஏற்படுத்தியது . இது ஒரு தற்செயலான செயல் அல்ல. இது முருகனின் சோதனை. புனித பயணத்தை மாசுபடுத்துபவர்களுக்கு கற்பித்த பாடம் என்றெல்லாம் பல அடியார்களும் பல கருத்துக்களை கூறினார்கள். ஏனைய சமய யாத்திரை மற்றும் விரதங்கள் போன்று அரசாங்கத்தினால் இதற்கான அத்தனை சலுகைகளும் இந்த யாத்திரை க்கும் வழங்கப்படவேண்டும். அது மாத்திரம் அல்ல பாதயாத்திரை செல்வோரின் வயது கட்டுப்பாடுகள் நடைமுறை விதிகள் என்பன முறைப்படி கட்டமைக்கப்பட வேண்டும். இது விடயத்தில் சம்பந்தப்பட்டவர் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். . இனிவரும் காலங்களில் ஆசார பூர்வமாக பக்தி முக்தியாக புனிதமாக கட்டுக் கோப்பாக நடைபெற வேண்டும் என்றார். முன்னாள் அமைச்சர் மனோகணேசன் இதனை வர்த்தமானி பிரகடனம் செய்வேன் என்று காட்டுப் பாதை திறக்கப்படும் போது அவர் கூறினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆட்சி மாறிவிட்டது. எனவே இதனை நாம் நிறைவேற்ற வேண்டும் என்றார். ( வி.ரி சகாதேவராஜா) |
1-10 of 4620