பிறசெய்திகள்
16.05.22- காங்கேசந் துறையிலிருந்து - பொத்துவில் கடற்பரப்புகளில் காற்றின் வேகம்– 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும்..
காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இந்த கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2-5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். |
15.05.22- இன்று வெசாக் நோன்மதி தினம்..
புத்தபெருமானின் பிறப்பு, இறப்பு, பரிநிர்வாணம் அடைந்தமை ஆகிய முக்கிய நிகழ்வுகளை நினைவு கூருவதற்கே விசாக நோன்மதி வெசாக் நோன்மதி தினத்தை பௌத்தர்கள் வெகுசிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பௌத்த மதத்தை ஸ்தாபித்தவரான கௌதம புத்த பெருமான் சுத்தோதன மன்னருக்கும் மகாமாயா அரசிக்கும் புதல்வனாக உதித்த சித்தார்த்த குமாரனாவார். வெசாக் பௌர்ணமி தினத்தில் அன்று உலக மக்களை நெறிப்படுத்த ஒரு உத்தமர் தோன்றி விட்டார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக ஏழு செந்தாமரைப் பூக்கள் தோன்றின என்றும் திடீரென பரிணமித்த இந்த ஏழு தாமரைப் பூக்களில் காலடி பதித்து நடந்ததாக பௌத்த வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. அரண்மனையில் வளர்ந்த சித்தார்த்தர் யசோதா என்ற பிறிதொரு நாட்டின் இளவரசியை மணம் செய்தார். அரண்மனை ஜோதிடர்கள் கணித்தபடியே இவரது திருமணமும் நடந்தது. சித்தார்த்தருடைய இல்லற வாழ்க்கை அரண்மனை வளாகத்தினுள்ளே களிப்புடன் இடம்பெற்றுக்கொண்டிருந்தது வெளியுலக மக்கள் படுகின்ற துன்ப துயரங்கள், அவஸ்தைகள் என்பவற்றை அடியோடு அறிந்திராத சித்தார்த்தருக்கு ஆண் மகன் பிறந்தார். அதற்கு ராகுலன் என்று நாமமும் சூட்டினார். ஒருநாள் அரண்மனைக் காவலர்களின் அசிரத்தை காரணமாக சித்தார்த்தர் அரச மாளிகையை விட்டு வெளியே வந்தார். வெளி உலகில் அவர் கண்ட முதல் காட்சி ஒரு பிரேத ஊர்வலமாகும்.வெற்றுடலைக் கண்ணுற்றதும் அவரது மனம் நெகிழ்ந்தது. பின்னர் ஒரு முதியவர் பொல்லொன்றுடன் தள்ளாடிய நிலையில் வீதியைக் கடந்து செல்வதையும் கண்டார் , மக்களின் துன்பத்திற்கு விமோசம் அளிக்கக்கூடிய விடயத்தில் சித்தார்த்த இளவரசர் அன்று இரவு முழுக்க ஆழமாகச் சிந்தித்து ஒரு திடமான முடிவை மேற்கொண்டார். நாம் வாழுகின்ற வாழ்க்கை நிரந்தரமற்றது வெறும் போலியானது என்பதை உணர்ந்தார். இதற்கு பிராயச்சித்தமாக மனதை ஒரு நிலைப்படுத்தி துறவறம் பூணுவதினால் தனக்கு வெற்றி கிட்டும் என்பதையும் உணர்ந்தார். காவியுடை தரித்தார். பின்னர் கருணாமூர்த்தியாகிய சித்தார்த்த இளவரசர் அன்புமனைவி யசோதாவுக்குக்கூட அறிவிக்காமல் அரண்மனையைவிட்டு வெளியேறினார். யசோதா சித்தார்த்தரைக் காணாது அழுது புலம்பினாள். ஏதோ ஒருவிதமாக தனது கணவன் துறவறம் பூண்டு போதி மரத்தடிக்குச் சென்றதை அறிந்தார். உடனடியாகவே குழந்தை ராகுலனை கட்டி அணைத்த வாறு சித்தார்த்தரிடம் சென்று அவரை மாளிகைக்கு திரும்புமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் சித்தார்த்த குமாரன் தனது தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளாது போதி மரத்தின் கீழ் நிஷ்டையில் ஆழ்ந்தார். பல்லாண்டு காலம் அரச மரத்தின் கீழ் துறவறம் புரிந்த அவர் ஈற்றில் பரிநிர்வாணம் அடைந்து கொள்வதற்கு கடும் தவம் மேற்கொண்டார். சுமார் எட்டு தசாப்த காலத்தின் பின்னரே சித்தார்த்தர் பரிநிர்வாணம் அடைந்தார். இந்தியாவில் கபிவஸ்துவே சித்தார்த்தருடைய பிறப்பிடமாக உள்ளதினால் அவர் பௌத்த மதத்தைப் பரப்பும் பணியை முதன் முதல் பாரதத்திலேயே மேற்கொண்டார். இதன் பிரகாரம் இலங்கையிலும் பௌத்த மதம் வேரூன்றத் தொடங்கியது. புத்தபெருமான் என்ற நிலையை அடைந்ததன் பின்னர் முதல் தடவையாக இதேபோன்றதொரு நாளில் அவர் கிம்புல்வத்புரவுக்கு விஜயம் செய்தார். அசுரர்களின் தொல்லைகளை நீக்கியதும் இதேபோன்றதொரு நாளிலாகும். புத்தபெருமானின் மூன்றாவது இலங்கை விஜயமும் வெசாக் போயா தினத்தன்று இடம்பெற்றது. மணி அக்கித அரசரின் அழைப்பை ஏற்று 500 பிக்குகளுடன் புத்தபெருமான் களனி பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார். விஜய மன்னர் 500பேருடன் வெசாக் தினத்தன்று இலங்கை வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. அனுராதபுரம் ருவன்வெலிசாயவில் நிர்மாணப் பணிகள் இதேபோன்ற ஒரு தினத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. |
14.05.22- பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகப்பரீட்சைகள் ஒத்திவைப்பு..
2020/2021 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு, பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பொருத்தமான விதிகளின் கீழ் நடைபெறவிருந்த நேர்முகப்பரீட்சைகளை ஒத்திவைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. |
12.05.22- கல்முனையில் தமிழர்களின் காணி உரிமை கபளீகரம் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ராஜன் கண்டனம்..
கல்முனை மாநகரத்தில் தமிழர்களின் இருப்பை இல்லாதொழிக்கும் சதித்திட்டத்தின் ஓரங்கமாக காணி பதியும் உரிமை கச்சிதமாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இவை ஒருபோதும் இன உறவை வலுப்படுத்த உதவாது.மாறாக விரிசல்களை ஏற்படுத்தும்.இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.... கல்முனை காணி பதிவகத்தில் காணி மற்றும் ஆவணங்கள் பதிவு நடவடிக்கைகள் பிரதேச செயலக ரீதியில் 2012 இல் இருந்து பதிவு செய்யப்பட்டு வந்தது. 13 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கி கல்முனை காணி பதிவகம் இயங்கி வருகிறது. காணி பதிவகத்தின் கீழ் கல்முனை வடக்கு செயலக பிரிவின் கீழ் உள்ள 29 கிராம சேவகர் பிரிவில் உள்ள காணிகள் இதுவரை காலமும் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் பதிவு செய்யப்பட்டு வந்தது. கல்முனையின் இன வாதத்தையும், இன குரோதத்தையும் விதைத்து அரசியல் செய்து வரும் வங்குரோத்து அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான அழுத்தத்தினால் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உரிய பதிவு நடவடிக்கை அனைத்தும் கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் கீழ் மாற்றப்பட்டு உள்ளது. பதிவாளர் நாயகத்தின் கடித்தின் பிரகாரமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திலிருந்தும் தமிழ்பிரதேச காணிப் பதிவுகளை அங்கு பதியவேண்டாம்.இனிமேல் எமது செயலகத்தின் பெயரின் கீழ் மட்டுமே பதியவேண்டும் என பதிவாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாம். இந்த விடயம் கல்முனையில் தமிழ் முஸ்லிம் இன விரிசலை மேலும் வலுப்படுத்தி அரசியல் ஆதாயம் பெறவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.உறவு கொண்டாடும் தலைமைகள் இது விடயத்தில் கவனம் எடுப்பார்களா.. ( காரைதீவு சகா) |
11.05.22- வாணி அறநெறிப் பாடசாலை கட்டடம் திறந்து வைப்பு..
இந்து கலாசார சமய அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிவனருள் பவுண்டேஷன் நிறுவன அனுசரணையில் மத்திய முகாம் நான்காம் கிராமம் வாணி அறநெறிப் பாடசாலை கட்டிட திறப்பு விழா நேற்று இடம்பெற்றது . கட்டிட திறப்பு விழா முன்னதாக கலாசார ஊர்வலம் சகிதம் இடம்பெற்று சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை இடம்பெற்றது. பின்னர் வாணி அறநெறிப் பாடசாலை பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.ஆன்மீக அதிதி தேவகுமார் குருக்கள் முன்னிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து கொண்டார் . கௌரவ அதிதிகளாக சிவனருள் பவுண்டேஷன் அம்பாரை மாவட்ட தலைவி தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுஷியா சேனாதிராஜா சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகா தேவராஜா செயலாளர் கே வாமதேவன் பொருளாளர் ஜனார்த்தனன் நாவிதன்வெளி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் யோகேஸ்வரன் உள்ளிட்ட அதிதிகள் கலந்து சிறப்பித்தார்கள். அறநெறி பாடசாலை கட்டிடம் மற்றும் தளவாடங்கள் 4 லட்சம் ரூபாய் செலவில் சிவனருள் பவுண்டேஷன் அமைத்துக் கொடுத்தது மாத்திரமல்லாமல் அவை அதிதிகளால் கையளிக்கப்பட்டன.மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.இறுதியில் அன்னதான மும் இடம்பெற்றது. (காரைதீவு சகா) |
08.05.22- திருநாவுக்கரசு நாயனார் குருபூசை தின விழா..
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் இணைந்து நடாந்திய நாவுக்கரசு நாயனார் குருபூசை தின விழாவானது திருக்கோவில் ,விநாயகபுரம், திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வு சிவஶ்ரீ .நீ.அங்குச நாதகுருக்கள் திருமுன்னிலையில் இடம்பெற்றது.கண.இராஜரெத்தினம் பணிப்பாளர் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் தலைமையில் இடம்பெற்றது.பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.திருக்கோயில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்து சிறப்பித்தார்கள்.மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு. ஜெயராஜ் நிகழ்விற்கான சகல ஏற்பாடுகளையும் செய்தார். (காரைதீவு சகா) |
02.05.22- வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரனின் கன்னி கவிதை நூல் வெளியீட்டு விழா..
கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரனின் “ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாள்கள்” கவிதை நூல் வெளியீடு (30.02.2022) மட்டக்களப்பு பிள்ளையாரடி தமிழ்ச்சங்க கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முன்னிலை அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத்தலைவர் பேராசிரியர் செ. யோகராசா கலந்து சிறப்பித்தார். முதன்மை அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன், கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய கலாநிதி.வே.விவேகானந்தராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். முன்னதாக பவளவிழாக் கண்ட நூலாசிரியரின் தாயாகிய திருமதி பாலநாகம்மா இராசரெத்தினம் அவர்களது 75வது பிறந்த தினத்தை தமிழ் சங்கத்தினர் மேடையில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். நூலாசிரியர் அறிமுக உரையை தேசபந்து மு.செல்வராசா நிகழ்த்த நூல் வெளியீட்டு உரையை தேசமான்ய விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார். நயவுரையை அருட்தந்தை அ.அ.நவரெத்தினம் நிகழ்த்த வாழ்த்துரைகளை டொக்டர்களான புஷ்பலதா லோகநாதன் பா.யூடி ரமேஷ் ஜெயகுமார் ஆகியோர் நிகழ்த்தினார்கள். மேலும் இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி.க.கலாரஞ்சனி, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.குண.சுகுணன் ஆகியோர் கலந்துகொண்டனர். மற்றும் இந்நூலின் முதல்பிரதியினை மட்டக்களப்பு தமிழ்ச்சங்க பொருளாளர் தேசபந்து மு.செல்வராசா பெற்றுக்கொண்டார். கதிரவன் த.இன்பராசாவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரித்திணைக்கள சிரேஸ்ட ஆணையாளர் சட்டத்தரணி மு. கணேசராசாவினால் வரவேற்புரையும், கலைக்கோகிலம் நாட்டியப்பள்ளியினால் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. உரைகளை தொடர்ந்து ஏற்புரையை நூலாசிரியர் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் முரளீஸ்வரன் நிகழ்த்த நன்றி உரையை துணை செயலாளர் திருமதி பிரியா கருணாகரன் நிகழ்த்தினார். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நூல் இலவசமாக வழங்கப்பட்டது. அழைப்பிதழில் " வாழ்த்துக்கள் மட்டுமே அன்பளிப்பாக ஏற்றுக் கொள்ளப்படும்" என்று குறிப்பிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. வைத்தியகலாநிதி இரா. முரளீஸ்வரன் ஒரு சிறந்த மருத்துவ நிருவாகி மட்டுமல்லாமல் ஓர் உன்னத இலக்கியப்படைப்பாளியுமாவார். 1976ல் யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து 1985ம் ஆண்டுகளின் பின்னர் மட்டக்களப்பில் வாழ்ந்துவரும் இவர் தனது கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலும், மருத்துவ பட்டப்படிப்பை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் மருத்துவ நிர்வாக முதுமானியை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருத்துவராக 2005ம் ஆண்டிலிருந்து கடமையை தொடங்கி 2013ம் ஆண்டு கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராகி தற்போதுவரை அங்கு தொடர்ந்து பணிபுரிகின்றார். மருத்துவ அனுபவங்களும் கவிதை அனுபவமும் இணைந்த மருத்துவமனை நாள்களைப்பற்றிய கவிதைகள் சேர்ந்த கவிதைத் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டது. ( காரைதீவு நிருபர்) |
01.05.22- சர்வதேச தொழிலாளர் தினம்.
இன்று மே தினம். Day of the International Solidarity of Workers. அதாவது ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக கொண்டாடப்படுகின்றது. இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. உலக கைத்தொழில் புரட்சியின் பயனாக ஆலைகளின் பெருக்கம், இயந்திரமயமாக்கம், பேரளவு உற்பத்தி ஆகிய காரணிகள் தொழிலாளரை ஒரு வர்க்கமாக ஒன்றுபட வைத்தது. ஒருபுறம் முதலாளிகள் உற்பத்தி முயற்சியில் இலாபம் பெறுகின்றனர். தொழிலாளரிடமிருந்து ஊழியத்தைப் பெறுகின்ற அளவு அவர்களுக்கான உரிமைகள், ஊதியம், சலுகைகள் என்பவற்றை வழங்குவதில் உற்பத்தியாளர் ஆர்வம் காட்டவில்லை. கால்வயிற்றுக் கஞ்சிக்காக தம் உழைப்பை நல்கும் தொழிலாளர் வேறு வழியின்றி முதலாளிகள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டனர். இதனால் தொழிலாளர் வாழ்க்கையை சிறுமையும், வறுமையும் ஆட்கொண்டன. அதே நேரம் தொழில் உரிமையாளர்களால் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்யவேண்டுமென தொழிலாளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இப்படிப்பட்ட பின்னணியில் கட்டாய வேலைநேரத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளில் குரல்களும் ஆங்காங்கே எழ ஆரம்பித்தன. குறிப்பாக இங்கிலாந்தில் தோன்றிய ஆவண இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியது. இதில் 10 மணி நேர வேலைக் கோரிக்கை முதன்மை பெற்றிருந்தது. 1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834ல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.. ஆனால் இப்போராட்டங்கள் தோல்வியில் முடிவடைந்தன. இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். மெல்பேர்ன் கட்டிடத் தொழிலாளர்களின் போராட்டம் 8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு என்ற அடிப்படையில் அமைந்திருந்தது. மெல்பேர்ன் தொழிலாளர்களின் வெற்றி தொழிலாளர் வர்க்க போராட்டத்தின் மைல்கல்லாக அமைந்தது எனலாம். காஷ்மீர் நிலை, உபா சட்டம்! பட்டியல் போட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு குழு! முக்கிய மீட்டிங்! என்னாச்சு சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக எடுத்துரைத்திருந்ததுடன் ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே 1917- ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 1832ல் பொஸ்டன் நகரில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், ரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க முதலாளிகள் ஆரம்பத்தில் இதனைக் கண்டு கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு" என்ற இயக்கம் 1884ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் அடிப்படையில் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. இந்த போட்டோவை உடனே பாருங்க.. அதை வச்சே.. உங்க கேரக்டரை ஈஸியா கண்டுபிடிச்சிரலாம்.. சவால்? தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ளதொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர் என கூறப்படுகின்றது. தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்காவின் பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர். இந்த எழுச்சி சிக்காகோவிலும் ஏனைய பிரதேசங்களிலும் தொடர்ந்தன. சிக்காகோவில் வேலை நிறுத்தப்போராட்டம் சூடுபிடித்தது. மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்" வாயிலில் 3000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை தொழிலாளர்கள் நடத்தினர் . ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். இச்சம்பவத்தில் 7 போலீஸாரும், 4 தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஜூன் 21, 1886 ஆரம்பமாகியது. இறுதியில் 7 தொழிலாளர் தலைவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது. 1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் '"சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்"" கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது. 1890 மே 1 இலிருந்து இன்று வரை ஒவ்வொராண்டும் மே 1ம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தொழிலாளரின் அவர்களது ஆற்றலின் தேவையை உணர்த்த வேண்டிய, போற்ற வேண்டிய இந்நாள் உண்மையான நோக்கத்திலிருந்து தலைகுப்புறப் புரண்டுவிட்டது. தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுப்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்ற இந்நாளானது இன்று உருவாக்கத்தின் நோக்கத்தையே மறந்து விட்டு ஒரு கேளிக்கை தினமாக மாறி வருவது சிந்திக்க வேண்டியதொரு விடயமாகும்.. தொழிலாளரின் ஒற்றுமையை உறுதிப்படுத்த சபதமேற்கும் இந்நாள் தொழிலாளரின் உரிமைகள் வெற்றிகொள்ள ஒன்றுபட்டுக் குரல் எழுப்ப வேண்டிய இந்நாள் பல்வேறு பிரிவினைகளுக்கு உரமூட்டும் நாளாக அமைந்துவிட்ட அவலத்தை நாம் மூன்றாம் உலக நாடுகளின் காணக்கூடியதாக உள்ளது. உழைப்பாளரின் சக்தியை, ஒற்றுமையை ஓங்கியொலிக்க வேண்டிய இந்நாள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்ட அவல நிலையையே வெளிப்படுத்துகின்றது. இத்தினத்தின் நோக்கம் இன்று புறந்தள்ளப்பட்டு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளதும் ஆள்பலத்தை வெளிப்படுத்தும் தேசிய நாளாக அமைந்துவிட்டது என்றால் அதுவே யதார்த்தம். அதுவே உண்மை. பிள்ளையார் பிடிக்க குரங்கானது என்பது போல் தொழிலாளரின் உரிமை பற்றி குரல் கொடுக்க வேண்டிய மேதின ஊர்வலங்களும், கூட்டங்களும் இன்று அரசியல் ஊர்வலங்களாகவும் அரசியல் மேடைகளாகவும் மாறிவிட்டன.. ஜனநாயக நாடான நமது நாடுகளில் மேதினம் நடத்த, ஊர்வலம் செல்ல, கூட்டத்திற்கு ஆள்திரட்ட பண நாயகமும், மதுநாயகமும் உதவும் பரிதாப நிலையும் காணப்படுகின்றது. மேதினத்தின் நோக்கத்தையே, அதன் உண்மைத் தாற்பரியத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு அதன் மேல் நின்று ஒப்பாரி வைப்பது போன்றே இன்றைய காலத்தில் மேதினம் கொண்டாடப்படுகின்றது. தொழிலாளர் வர்க்கமே ஒன்றுபட உரிமைகளை வென்றெடு, நிலைநாட்டு என்று குரல் எழுப்ப வேண்டிய பெறுமதிமிக்க இத்தினத்தில் மூன்றாம் உலக நாடுகளின் நவீன சுரண்டல்கள் பற்றியும், நமது நாடுகளின் தொழிலாளர் நிலைபற்றி சிந்திப்பது காலத்தின் தேவையாகும். |
30.04.22- நாவிதன்வெளியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல்..
சமகால நெருக்கடிக்கு மத்தியிலும் சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி அண்ணமலை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றது. முறைப்படி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவது போன்று தேர்தல் சாவடியில் உத்தியோகத்தர் இருக்கும் வண்ணம் இந்தத் தேர்தல் நடைபெற்றது. கல்வியமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக நடைபெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலில் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலராக பிரதி அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் கடமையாற்றினார். தேர்தல் ஆணையாளராக அதிபர் எஸ் பாலசிங்கன் கடமையாற்றினார். அங்கு முறையான தேர்தல் முறைப்படி மாணவர் மன்ற தேர்தல் நடந்தது. தெரிவு இடம்பெற்றது. (காரைதீவு நிருபர்) |
29.04.22- டொக்டர். முரளீஸ்வரனின் கன்னி கவிதை நூல் வெளியீட்டு விழா..
மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரனின் “ஒரு மருத்துவரின் மருத்துவமனை நாள்கள்” கவிதை நூல் வெளியீடு நாளை 30.04.2022 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு பிள்ளையாரடி தமிழ்ச்சங்க கட்டடத்தில் இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சித மூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு முன்னிலையாக கிழக்குப் பல்கலைக்கழக மேனாள் மொழித்துறைத்தலைவர் பேராசிரியர் செ. யோகராசா , முதன்மை அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன், கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய கலாநிதி.வே.விவேகானந்தராஜா ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். நூலாசிரியர் அறிமுக உரையை தேசபந்து மு.செல்வராசா நிகழ்த்த நூல் வெளியீட்டு உரையை தேசமான்ய விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்துவார். நயவுரையை அருட்தந்தை அ.அ.நவரெத்தினம் நிகழ்த்த வாழ்த்துரைகளை டொக்டர்களான புஷ்பலதா லோகநாதன் பா.யூடி ரமேஷ் ஜெயகுமார் ஆகியோர் நிகழ்த்துவார்கள். மேலும் இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி.க.கலாரஞ்சனி, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.கு.சுகுணன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மற்றும் இந்நூலின் முதல்பிரதியினை மட்டக்களப்பு தமிழ்ச்சங்க பொருளாளர் தேசபந்து மு.செல்வராசா பெற்றுக்கொள்ளவுள்ளார். கதிரவன் த.இன்பராசாவின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரித்திணைக்கள சிரேஸ்ட ஆணையாளர் சட்டத்தரணி மு. கணேசராசாவினால் வரவேற்புரையும், கலைக்கோகிலம் நாட்டியப்பள்ளியினால் வரவேற்பு நடனமும் இடம்பெறவுள்ளது. வைத்தியகலாநிதி இரா. முரளீஸ்வரன் ஒரு சிறந்த மருத்துவ நிருவாகி மட்டுமல்லாமல் ஓர் உன்னத இலக்கியப்படைப்பாளியுமாவார். 1976ல் யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து 1985ம் ஆண்டுகளின் பின்னர் மட்டக்களப்பில் வாழ்ந்துவரும் இவர் தனது கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலும், மருத்துவ பட்டப்படிப்பை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் மருத்துவ நிர்வாக முதுமானியை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மருத்துவராக 2005ம் ஆண்டிலிருந்து கடமையை தொடங்கி 2013ம் ஆண்டு கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகராகி தற்போதுவரை அங்கு தொடர்ந்து பணிபுரிகின்றார். மருத்துவ அனுபவங்களும் கவிதை அனுபவமும் இணைந்த மருத்துவமனை நாள்களைப்பற்றிய கவிதைகள் சேர்ந்த கவிதைத் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்படவுள்ளது. ( காரைதீவு நிருபர்) |
1-10 of 2858