பிறசெய்திகள்
06.09.22- அறநெறிக்கல்வி உயர்நிலையில் சாதனை படைக்க உதவியாக இருந்தது. மருத்துவத்துறைக்கு தெரிவான விநாயகபுரம் மாணவி தனுஷ்கா..
அறநெறிக்கல்வி உயர்நிலையில் சாதனை படைக்க உதவியாக இருந்தது மருத்துவத்துறைக்கு தெரிவான விநாயகபுரம் மாணவி தனுஷ்கா.. உயர்தர உயிரியல்த்துறையில் மூன்று பாடங்களிலும் மூன்று "ஏ" சித்திகளை பெறுவதற்கு எனக்கு அறநெறிகல்வி மிகவும் உதவியாக இருந்தது என்று திருக்கோவில் வலயத்தில் பின் தங்கிய விநாயகபுரம் தமிழ் மகா வித்தியாலயத்தில் முதல் தடவையாக. உயிரியல்த்துறையில் மூன்று" ஏ" சித்திகளை பெற்ற முருகானந்தம் தனுஷ்கா என்ற மாணவி தெரிவித்தார். விநாயகபுரம் தமிழ் மகாவித்தியாலய வரலாற்றில் உயிரியல் துறையில் மூன்று பாடங்களிலும் மூன்று 'ஏ" சித்திகளை முருகானந்தம் தனுஷ்கா இம்முறை பெற்று மருத்துவத் துறைக்கு தெரிவாகி இருக்கின்றார் என்பதை பாடசாலை அதிபர் த.புஸ்பராஜா உறுதிப்படுத்தினார். சாதனை மாணவி தனுஷ்கா கூறுகையில்.. அறநெறி கல்வியானது எனக்கு அதிகாலையில் எழுந்து கற்பதற்கும் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கும் மிகவும் உதவியாக இருந்தது.மேலும்அளிக்கப்பட்ட வழிகாட்டல் பயிற்சிகள் தியான பயிற்சிகள் மேலும் உதவியாக இருந்தது. இதன் ஊடாக எனக்கு உயர்தர பாடங்களை படிப்பதற்கு இலகுவாக இருந்தது. இந்த வேளையிலே கற்பித்த ஆசிரியர்கள் அதிபர் பெற்றோர்கள் இதற்கு உதவியாக இருந்த குருகுலத்தினர் அனைவரையும் நன்றியோடு பார்க்கின்றேன் என்றார்.அறநெறிக்கல்வியை வழங்கிய தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் கண்.இராஜரெத்தினம்( கண்ணன்) பாராட்டுகையில்.. முருகானந்தம் தனுஷ்கா இளமையில் இருந்தே அறநெறிக் கல்வியை ஆர்வத்துடன் கற்று வந்தார். இவர் பின்தங்கிய விநாயகபுரம் கிராமத்தில் சிறந்த வைத்தியராக வருவார் என்று அன்றே ஆரூடம் கூறியிருந்தோம்.அது இன்று கனிந்திருக்கின்றது. எனவே அனைத்து இந்து மாணவர்களும் தொடர்ந்து அறநெறி கல்வியறிவை பெற்று கொள்ள வேண்டும் என்றார். ( காரைதீவு சகா) |
06.09.22- செட்டியூர் சிந்தனை செல்வன் மயில்வாகனம் . அவரது 84வது ஜனன தினம் இன்று.
மட்டக்களப்புத் தமிழகத்தில் சீர் பெற்ற செட்டிபாளையம் பதி புலமையின் விளைநிலம் என்பது மறுக்க முடியாத உண்மை. இப் பதியில் இரணிய சம்கார அம்மானை எழுதிய மாறன் விதானை சமகாலப் புலமை நண்பர்களான புலவர் இ.வ. கணபதிப்பிள்ளை, வரகவி சின்னவப் புலவர் மற்றும் வாய்மொழிப் புலமை பெற்ற கணபதியார் (துறைக்காரர்), அவரது மகன் கவிஞர் மயில்வாகனம் ஆகியோர் வாழ்ந்தார்களென்பது எமக்கெல்லாம் பெருமை. வார்த்தைகளுக்கு வகிடெடுத்து கவிகளாய் அழகு பார்த்தவர் செட்டியூர் சிந்தனைச் செல்வன் என்ற புனை பெயர் கொண்ட கவிஞ்ஞர் க. மயில்வாகனம், அவர் கவிதையோடு மட்டுமன்றி நாடகம், நாட்டுக் கூத்து, நாட்டிய நாடகம், வசந்தன், கும்மி, கோலாட்டம் போன்ற ஒட்டு மொத்தக் கலைகளின் தலைவன். கலைத்தாயின் ஏக புதல்வன். கவிஞ்ஞனாக, பாடகனாக, இசையமைப்பாளராக, இயக்குனராக, நடிகராக எத்தனை பாத்திரங்கள். 1970 களில் இருந்து செட்டிபாளையம் என்னும் பெயருக்கு கலைகளால் இலங்கையின் மூலை முடுக்கெல்லாம் முத்திரை பதித்தவர் செட்டியூர் சிந்தனைச் செல்வன் என்ற கவிஞர் க.மயில்வாகனம் என்பது நிதர்சனமான உண்மை நான் ஒரு கலைஞனாக சமூக பற்றுடையவனாக இலங்கை நிருவாக சேவை அதிகாரியாக பரிணமிப்பதில் எனக்கு நல்லறிவூட்டிய ஆசிரிய பெருந்தகைகளுள் மதிப்புக்குரிய ஆசான் கவிஞர் மயில்வாகனம் ஐயா அவர்களது வழிநடத்தல் தனித்துவமானது. மட்/செட்டிபாளையம் பாடசாலையில் அவர்பணிபுரிந்த காலம் (1971-1983) வசந்தம் வீசிய காலம் கல்வியும் கலையும் சமாந்தரமாக வளர்ந்த காலம் கலையூடான ஈடுபாடு மனிதனை கல்வியில் பிரகாசிக்க வைக்கும் என்பற்கு நானே எனக்கு உதாரணம். எதிலும் கலையை காண்பவனே நிதர்சனமான கலைஞன் இவரது படைப்புக்கள் கவிதை, பாடல், நாடக இயக்கம், நாட்டுக்கூத்து என விரிந்தவெளி கொண்டவை. அக்கால மாணவப் பருவத்தில் என்னை பல்வேறு பாத்திரங்கள் நடிக்கவைத்து அழகுபார்த்ததவர். மாணவர் மன்றங்கள், வாணி விழா நிகழ்வுகள் பாடசாலைகளுக்கிடையேயான போட்டி நிகழ்வுகள் என்னைபோன்ற பலரருக்கு படிக்கல்லாய் அமைந்தது. பாடசாலை குடும்பமானது இவரோடு செந்தில் ஐயா,சபா சேர் முத்துலிங்கம் சேர், பிச்சைப்பிள்ளை சேர், கந்தப்பெருமாளய்யா, ஆறுமுகம் ஐயா பவளம் ரீச்சர் போன்றோர்களும் தனியாகவும் கூட்டாகவும் படைப்புக்களை பிரசவித்து தேசிய மட்டம் வரை பாடசாலையை முன்கொண்டு சென்று வரலாற்றில் பல பதிவேற்றினர். இவ்வாறு நீண்ட கலைப்பயணம் பாடசாலைக்கப்பால் சமூக சீரழிவுகளையும் ,சமூக அடக்குமுறைகள்,கல்வியின் முக்கியத்துவம், கணவன் மனைவியுறவு, தொழில் முன்னேற்றம் கிராமத்து ரசனைகளையும் வாழ்வாதார மூலங்களையும் கருப்பொருளாக கையகப்படுத்தின தமிழ் சுடர் நளின கலாமன்றம் மேற்கூறப்பட்டோராலும் கவி விநாயகமூர்த்தி மற்றும் பல இளம் கலைஞர்களின் அயரா முயற்சியாலும் அரச விதிமுறைகளை பின்பற்றி 1973களில் உதயமானது அதன் தலைவராக கவிஞர் மயில்வாகனம் இம்மன்றத்தை வழிநடத்தினார். பிற்காலத்தில் எமது கிராமம் பல சாதனைகளை குவிப்பதற்கும், புதிய பல்துறை கலைஞர்கள் உருவாகுவதற்கும் களமமைத்ததும் இம்மன்றமே. கவிஞரின் வீடு கலைக்கூடமானது தினம் பிந்நேரங்களில் ஆற்றுகைக்கு முன்னரான வழுவகற்றும் ஒத்திகைகள் வளவு முழுவதும் ஆங்காங்கே வெவ்வேறு தளங்களில் இடம்பெறும். இவ் அரங்கேற்றங்கள் பிரதேச, மாவட்ட மட்ட கலாமன்ற நிகழ்வுகள் எமது கிராம அயற்கிராம கோயில் திருவிழாக்களின் நிகழ்ச்சிகளாக நடைபெறும் எனது மாமி கவிஞரின் மனைவி புட்டும் தேங்காப்பும் சீனீயும் தந்து விருந்தோம்ல் செய்வது தனிரகம். நான் அண்ணன் கனகரெத்தினம் எனது சகோதரங்கள் இப்படி பலர் அங்கு மையம் கொள்வார்கள் விடுமுறை நாட்களில் வாகனங்கள் வரிசையாக நிற்கும் பலவூர் திருவிழாக்கள் இதுபோல் போட்டி நிகழ்வுகளுக்கு எமை ஏற்றிச் சென்று ஆற்றுகை செய்வதற்காக மாலைவேளையில் எம்மை வரவேற்க சனம் திரளும் அது மனதை விட்டகலா பசுமை நினைவு. குறிப்பாக கவிஞர் மயில்வாகனம் ஆற்றுகை செய்த பொன்னம்பல போடியார் சோடியன் குடுமி சும்மாடுமா எனும் நவீன நாட்டுக்கூத்தில் எனது சகோதரர் கனகரெத்தினம் அவர்களை பார்த்து புவனேஸ்வரி அவர்கள் பாடிய "வெற்றிலை தோட்டத்திற்கு தினம் விடிந்தெழும்பி போங்கவென்று எத்தனை தரம் சொல்லிவிட்டேன் நீங்க என்னத்த பண்ணி கிழீக்கிறீங்க.. அதற்கு கனகரெத்தினம் அவர்கள் "என்னடி அம்மா சின்னப்புள்ள நீயும் என்னென்னமோ செய்யீறீயே சன்னதத்த கிழப்பாதடி இப்ப சரசம் பண்ண நேரமில்ல.. இவ்வாறு கணவன் மனைவி அன்னியொன்னிய உரையாடல்களை அங்கதசுவையுடன் வெளிக்காட்டுகின்றார். இதே போல் சோழியன் குடும்பி நவீன நாடகத்தில் பெண்கள் முழங்காலுக்கு மேல்ஆடை அணிவதற்கான விழிப்புணர்வை குடும்பதில் இருந்தே ஆம்பிக்கின்றார் அதாவது "என் மகளே சிறு கண்மணியே ராணியே செல்வராணியே.. உன்னுடைய கோலத்தால் உலகம் சிரிக்கிதே ராணியே செல்வராணியே இவ்வாறாக கலைப்பணியோடு நின்று விடாது சமூகத்தை நேசிக்கும் நல்மனிதராக நல்லபல சமூகபணிகளை இவ்வூருக்கு செய்து மக்களோடு மக்களாக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து மக்கள் பிரச்சினைகளை தனது பிரச்சினையாக முன்னிலைப்படுத்தி ஊர்போற்ற வாழ்ந்த செட்டியூர் சிந்தனை செல்வன் மயில்வாகனம் பற்றி அவரது 84வது ஜனன தினத்தில் பதிவிடுவதில் பெருமை கொள்கிறேன். மூ.கோபாலரெத்தினம் செயலாளர் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கிழக்கு மாகாணம் |
06.09.22- கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் மட்டக்களப்பு இரு இளைஞர்கள் விழிப்புணர்வு சைக்கிள் சவாரி..
கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் இலங்கையின் கரையோர பிரதேசங்களனூடாக சைக்கிளில் சுற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் மட்டக்களப்பு இளைஞர்கள் இருவர். “Ocean biome “அமைப்பின் கடல் சுற்றுப்புறச் சூழலையும் கடல் வளத்தையும் பாதுகாப்பதற்காக சமூகத்தில் பல்வேறு வேலைத் திட்டங்களை உருவாக்கி செயல் படுத்தும் நோக்கில் இலங்கையை சுற்றி வரும் மட்டக்களப்பு பிரதேச இளைஞர்களான பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி பழைய மாணவரான அனாமிகன் குமார சிங்கம் மற்றும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி பழைய மாணவரான சஞ்ஜீவன் அமலநாதன் ஆகியோர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்தனர். தமது நல்ல செயற்பாடுகள் எங்கோ ஏதோ ஒரு வழியில் பொதுமக்களைை சென்றடையும் என்பதும் அதனூடாக நிகழும் மாற்றங்களுமே அதற்கு சான்று . சைக்கிள் ஓட்டிகளின் செயற்பாடுகளினால் தூண்டப்பட்டவர்களில் இந்த இரு இளைஞர்களும் அடங்குவர். சைக்கிளில் நாட்டின் கரையோர மாவட்டங்களில் குறிக்கோளோடு சுற்றிவர புறப்பட்டிருக்கும் இரு இளைஞர்களின் குறிக்கோள் நிச்சயம் வெற்றியடையும். இரண்டு சைக்கிள் ஓட்டிகளும் 11 நாட்கள் கொண்ட நீண்ட சைக்கிள் சவாரியை ஓசோன் ரைட் எனும் கருப்பொருளில் பயணிக்கிறார்கள் இப்பயணத்தின் நோக்கமானது கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் கடலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் கடல் வளங்களை கையாளும்போது பொறுப்பை உருவாக்குவதற்கும் நாட்டின் கரையோர மாவட்டங்களை சுற்றி வருகின்ற சைக்கிள் ஓட்ட சவாரி கடலும் கடல் சார்ந்த இடங்களையும் நேசிக்கின்ற இளைஞர் யுவதிகள் வெளிநாட்டவர் என 300க்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் மட்டக்களப்பை மையப்படுத்தி இயங்கி வரும் “Ocean biome எனும் தனியார் தன்னார்வு நிறுவனம் திறந்த கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் கடல்சார் கல்வி அறிவு ஆகியவற்றை இணைப்பதன் மூலம் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் மிக அழுத்தமான சவால்களை எவ்வாறு சமாளிக்கலாம் என்ற பல்வேறு திட்டங்களை கொண்டு நமது அடுத்த தலைமுறையை கடல்நீர் சார் நேயமிக்க சமூகமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு அவற்றை வெற்றி கொள்வதற்காக கல்வி ,தொழில்நுட்பம் , ஆராய்ச்சி மற்றும் வணிகம் எனும் பெரும் 4 துறைகளின் ஊடாக மிகச் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது . கடல் சுற்றுப்புற சூழலையும் கடல் வளத்தையும் பாதுகாப்பதற்காக சமூகத்தில் பல்வேறு சேவைத் திட்டங்களை உருவாக்கி அவற்றை வாரம் , மாதம் , வருடம் என மிக சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. அறக்கட்டளைகள் மற்றும் பாடசாலைகளில் மாணவர்களிடையே பேராசிரியர்கள் மற்றும் துறை சார்ந்தவர்களின் உதவியோடு கடலோர சுற்றுப்புற அமைப்புகளை பாதிக்கும் பிரச்சினைகளை தீர்க்க இயற்கை அடிப்படையிலான தீவுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பான விளக்கங்களை மாணவர்கள் மத்தியில் தெளிவு படுத்துவதினூடாகவும் நாமும் எதிர்கொள்ளும் நம் அடுத்த தலைமுறையினருக்கு எதிர்கொள்ளவிருக்கும் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் ஒன்றான கடல் குப்பைகள் மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் ஆகும். இவை நம் ஆரோக்கியத்திற்கு சுத்தமான கடலை நம்பி இருக்கும் மனித நடவடிக்கைகளுக்கும் கடுமையான அச்சுறுத்தலாக அமையும் என்பதை மாணவர்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு ஊடாகவும் பிளாஸ்டிக் ( Plastic awareness ) தெளிவு படுத்தி வருகின்றது . பாடசாலை மாணவ மாணவிகள் பாடசாலை சூழலில் காணப்படுகின்ற குப்பைகளை சேகரித்து அவற்றை வேறுபடுத்தி உக்கக்கூடிய , உக்க முடியாத குப்பைகள் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை வழங்குவதோடு மைக்ரோ பிளாஸ்டிக் (Micro plastic ) நம்பமுடியாத அளவிற்கு நுணுக்கமாக இருந்தாலும் அவைகள் உயிர்கள் மற்றும் சூழலில் மீது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்களிடையே நிருபிப்பதன் மூலமாகவும் விழிப்புணர்வை மேற்கொண்டு வருகின்றது. போயா தினங்களில் பிளாஸ்டிக் அற்ற போயா தினம் ( plastic free poya Day ) தலைப்பில் கடல் மற்றும் கடலை அண்டிய பிரதேசங்களில் அதனை அண்டி வாழும் மக்களின் உதவியோடு பிளாஸ்டிக்குகள் அதுதொடர்பான குப்பைகளை சேகரித்து அதன் மூலம் கடல் வளத்தை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை தொடராக செய்து வருகின்றது. இவை மட்டுமல்லாது கடல் வளங்களை பாதுகாப்பதற்காக மிகப் பாரிய வேலைத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது .இந்த அமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் ஒன்றுதான் இந்த இரு இளைஞர்களாலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள ” “ Ocean ride “ சைக்கிள் சவாரியாகும். இலங்கையின் கரையோர மாவட்டங்களான மட்டக்களப்பு ,திருகோணமலை ,முல்லைத்தீவு ,யாழ்ப்பாணம், புத்தளம் ,நீர்கொழும்பு ,கிக்கடுவை ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக மீண்டும் மட்டக்களப்பை வந்தடையும் இப்பயணம் மொத்தம் 1,300 கிலோ மீட்டர்கள் 11 நாட்கள் கொண்டதாகும். அனாமிகன் எருவில் குமாரசிங்கம் சுமீத்திரா தம்பதிகளின் புதல்வரும் , சஞ்ஜீவன் மட்டக்களப்பு அமலநாதன் கமலேஸ்வரி தம்பதிகளின் புதல்வருமாகும். ( அஸ்ஹர் இப்றாஹிம் ) |
04.09.22- பொலிஸ் திணைக்களத்தின் 156 வருட பூர்த்தியினை முன்னிட்டு Battle of police கண்காட்சி கிறிக்கட்..
பொலிஸ் திணைக்களத்தின் 156 வருட பூர்த்தியினை முன்னிட்டு கல்முனை ஸாஹிராவில் Battle of police கண்காட்சி கிறிக்கட் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வருட பூர்த்தியை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ஆசிரியர் அணிக்கும் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸாருக்கும் இடையிலான 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கண்காட்சி கிறிக்கட் போட்டியொன்று இன்று 04.09.2022 மாலை 2 மணிக்கு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கல்லூரியின் பழைய மாணவருமான எஸ்.எல்.சம்சுதீன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வை கல்லூரி விளையாட்டுக்குழு ஒழுங்கு செய்துள்ளது. |
30.08.22- கல்முனை பற்றிமாவில் 5 மருத்துவம் 8, பொறியியல் துறை மாணவர் தேர்வு..
கிழக்கின் புகழ் பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் இம்முறை வெளியான கபொத உயர்தர பரீட்சை முடிவின்படி, 5 மாணவர்கள் மருத்துவத் துறைக்கும் ,எட்டு மாணவர்கள் பொறியியல் துறைக்கும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என கல்லூரி அதிபர் வண.சகோ.சந்தியாகு தெரிவித்தார். மருத்துவத் துறையில் செல்வராஜா ரொஷியா ,லிங்கமூர்த்தி மிதுர்ஷியா ஆகியோர் மூன்று ஏ சித்திகளையும் ,கோகிலன் சஞ்சித் இரண்டு ஏ ஒரு சில சித்தியும், சந்திரகுமார் ஹிரோபிகா, திருச்செல்வம் பெரதிஷ்ரா, ஆகியோர் இரண்டு ஏபி சித்திகளையும்பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகி இருக்கின்றார்கள். பொறியியல் துறையில் கிருஷ்ணகுமார் முகேஷ்ராம், சுரேஷ்காந்த் ஆர்னோல்ட் எரிக்ஸ்மன், தம்பி ஐயா ஹரிஷ்ராஜ் ,சண்முகநாதன் சர்வஜன் ஆகியோர் 3ஏ சித்திகளைபெற்றுள்ளனர். அதேபோல மோகன் கிருஷோத், அண்றிசனூன் டென்னிஸ், திருச்செல்வம் கோபுராஜ், பரமேஸ்வரன் திபுசாந் ஆகியோர் ஏ2 பி சித்திகளை பெற்று பொறியியல் துறைக்கு தேர்வாகியுள்ளனர். ( காரைதீவு சகா) |
29.08.22- 2021 உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன -171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி..
2021 க.பொ.த. உயர்த தர பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தில் (28.08.2022) வெளியிடப்பட்டுள்ளன. 2021 பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 72,682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.பின்வரும் இணையதளங்களில் பரீட்சை பேறுபேறுகளை பார்வையிட முடியும் : https://www.doenets.lk/examresults http://www.results.exams.gov.lk/ 236,035 பாடசாலை பரீட்சார்த்திகளும், 36,647 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இப்பரீட்சைகளுக்கு தோற்றியுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 149,946 பாடசாலை பரீட்சார்த்திகளும், 21,551 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாதாகவும், அறிவித்துள்ளது. |
28.08.22- அரச வலைத்தளத்திலிருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நீக்கப்பட்டமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..
அரச வலைத்தளத்திலிருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நீக்கப்பட்டமைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் காட்டம்.. அரச வலைத்தளத்தில் இருந்து எமது பாரம்பரிய கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நீக்கப்பட்டு இருப்பது தொடர்பாக எமது தமிழ் மக்கள் கொதிப்படைந்துள்ளனர் .இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் காட்டமாக தெரிவித்துள்ளார். அரசவலைத்தளத்தில் இருந்து கல்முனை வடக்கு செயலகமும், 29 கிராம சேவையாளர் பிரிவுகளும் நீக்கப்பட்டு இருப்பது தொடர்பாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் .. இந்த விடயம், மேலும் மேலும் கல்முனை தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனங்களையும் புண்பட செய்திருக்கின்றது. மாறாக கொதிப்படையை செய்திருக்கின்றது. ஒற்றுமை பற்றி பேசிக்கொண்டு இன்னும் இன்னும் இந்த வேற்றுமை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக இனரீதியாக செய்து வருகின்ற அந்த இனவெறியர்களின் செயல்பாடு நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாங்களும் அதே பாணியிலேயே செயல்பட நிர்பந்திக்கப்படுவோம். நாங்கள் எவ்வளவுதான் ஒற்றுமையாக வாழ வேண்டும், ஐக்கியமாக ,சமாதானமாக வாழ வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்த போதிலும், தொடர்ச்சியாக சில இனவாதிகள் அதனை அலட்சியம் செய்து வருவது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வழி வகுக்காது என நினைக்கின்றேன். எனவே இந்த விடயத்தில் உரிய சம்பந்தப்பட்டவர்களோடு பேசி கடுமையான நடவடிக்கை எடுக்க இருக்கின்றேன். என்னிடம் கல்முனையை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் இது தொடர்பாக தொடர்ச்சியாக ஆத்திரத்தோடு முறையிட்டு வருகின்றார்கள் . பலர் நேரடியாக வந்து தமது கண்டனங்களை உணர்ச்சி வசப்பட்டு தெரிவிக்கின்றார்கள். இதனை ,இன்னும் இன்னும் நீங்களும் உங்கள் கட்சியும் வெறுமனே பார்த்துக் கொண்டு இருப்பது ஏன்? என ஆக்ரோஷமாக கேட்கிறார்கள்.. எனவே இதனை சாதாரணமாக நான் எடுத்துக் கொள்ள முடியாது .எனது கட்சியின் தலைவர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இது தொடர்பாக தெரிவித்து இருக்கின்றேன். விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ( காரைதீவு சகா) |
26.08.22- அம்பாறை மாவட்ட சகவாழ்வு குழுக்கள் நுவரெலியா விஜயம்..
இலங்கை உள்ளுராட்சி மன்ற சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சகவாழ்வு குழுக்கள் (23.08.2022) நுவரெலியாவிற்கு விஜயம் செய்தது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு ,பொத்துவில் ,லாகுகல ஆகிய மூவினங்களையும் பிரதிபலிக்கின்ற பிரதேச சபைகளின் சகவாழ்வு குழுக்கள் இதிலே கலந்து கொண்டன. மூன்று சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் ,மற்றும் சகவாழ்வு குழு உறுப்பினர்கள் இந்த விஜயத்தின் போது கலந்து கொண்டிருந்தார்கள். இம் மூன்று பிரதேச சபைகளின் சகவாழ்வு குழுக்கள், காரைதீவில் இருந்து தமது பயணத்தை மேற்கொண்டன. (24.08.2022) நுவரெலியா மாநகர சபை மண்டபத்திலே சந்தித்து அங்கு சகவாழ்வு குழுக்களின் முன்னேற்றம் பற்றி கலந்துரையாட இருக்கின்றார்கள். இலங்கை உள்ளாட்சி மன்ற சம்மேளனத்தின் தேசிய இணைப்பாளர் பெருமாள் பிரதீப் தலைமையிலே இந்த கலந்துரையாடல் இடம் பெற இருக்கின்றது. இந்த நுவரெலியா விஜயம் தொடர்பாக, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவிக்கையில்.. இன்று நாட்டுக்கும், உலகத்துக்கும் தேவையானது சகவாழ்வு, ஐக்கியம், நல்லிணக்கம் ,இன உறவு என்பதே. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை இழந்து உலகமே தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உள்ளாட்சி மன்ற சம்மேளனம் இப்படிப்பட்டதொரு வேலைத் திட்டத்தை தயாரித்து, சகவாழ்வு குழுக்களை அமைத்து இனங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்துவது மகிழ்ச்சி தருகின்ற விடயம் ஆகும். நுவரெலியா மாநகர சபையின் சகவாழ்வு செயற்பாடு மற்றும் எமது அம்பாறை மாவட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் அங்கு பரஸ்பரம் கருத்துக்கள் பரிமாறப்படவிருக்கின்றன. இது எதிர்கால இன நல்லுறவு, சகவாழ்வு மற்றும் ஐக்கியத்திற்கு வழிவகுக்கும் என்று பெரிதும் நம்புகின்றேன். சம்மேளனத்திற்கு நன்றிகள் என்றார். |
1-10 of 2937